Tuesday, May 24, 2005

மணிக்கொடி சிற்றிதழ்

நமது இந்தியா , ஆங்கிலேயர்களின் கைவசம் இருந்த காலத்திலேயே சிற்றிதழ்கள் தோன்றிவிட்டன .வணிக நோக்கமில்லாமல் இலக்கியத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து தமிழகத்தில் பல சிற்றிதழ்கள் இயங்கி வருகின்றன/ வந்தன.பல சிற்றிதழ்கள் தோன்றிய சிறிது காலத்திலேயே பொருளாதாரச் சுழலில் சிக்கி அல்பாய்ஸில் போய்ச் சேர்ந்துவிட்டன . இந்தப் பதிவில் மணிக்கொடி சிற்றிதழ் குறித்து நான் அறிந்தவைகளை மட்டும் எழுதியிருக்கிறேன் . தகவல் பிழை இருப்பின் தெரியப்படுத்தவும்.

மணிக்கொடி இதழ் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் என மூன்று பேரைக் குறிப்பிடலாம்

1) கு.சீனிவாசன், 2) வ.ராமசாமி , 3) டி.எஸ் சொக்கலிங்கம்.

வ.ராமசாமி

பாரதியின் உரைநடை வாரிசு என்றழைக்கப்படும் வ.ரா, பூணூல் அணிவதைத் தவிர்த்தார்.பெண்ணடிமை மூடப்பழக்கங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.தாம் எழுதிய " தமிழ் நாட்டுப் பெரியார்கள் " என்ற நூலில் ஈ.வே.ரா பெரியாரையும்ஒருவராகச் சேர்த்துக் கொண்டார். இதைக் கண்டு வியந்த அறிஞர் அண்ணாதமது திராவிடநாடு பத்திரிகையில் வ.ராவைப் பற்றி எழுதுகையில் " அக்கிரகாரத்து அதிசய மனிதர் " என்று வருணித்தார் .

0

புதுவையில் அரவிந்தருடனும் பாரதியுடனும் வ.ரா வசித்த பொழுதுவங்காளி மொழியைக் கற்றுக் கொண்டு ,பக்கிம் சந்திரசட்டர்ஜி எழுதிய ஜோடிமந்திரங்களை தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார் . தினமும் சில பக்கங்கள் என்ற முறையில் மொழி பெயர்த்து , அதை நோட்டில் எழுதிக் கொண்டுவந்தார். ஒருமுறை வ.ரா தனது மொழிபெயர்ப்பை நோட்டில் எழுதிக் கொண்டிருந்தபொழுது பாரதி வந்துவிட்டார். உடனே அந்த நோட்டை படுக்கையின் கீழே ஒளித்து வைக்க முற்படுகையில் , பாரதி குறுக்கிட்டு " என்ன ஓய் ! ரகசியம் ஒளிக்கிறீர் ? எடும் இப்படி ! " என்று நோட்டைப் படிக்க ஆரம்பித்தார் , மேலும் அரவிந்தரை அழைத்து " பாபுஜி இந்த நோட்புத்தகத்தில் என்ன இருக்கிறது தெரியுமா ? பக்கிம் பாபுவின் " ஜோடிமந்திரங்களின் மொழி பெயர்ப்பு. நம் ராமசாமி ஐயங்கார் எழுதியிருக்கிறார் .அற்புதமான தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். வசனத்தில் இனி எனக்கு வேலையில்லை ,கவிதைகளை மட்டும் நான் கவனித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.


மணிக்கொடி சீனிவாசன்



தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள சீர்காழி கிராமத்தில் ,
ஸ்ரீ வெ.குப்புசாமி சாஸ்திரிக்கும் , ஸ்ரீமதி. பாகீரதி அவர்களுக்கும் 1899 ஆம் ஆண்டு மேமாதம் 30 ஆம் நாள் சீனிவாசன் பிறந்தார் . சென்னை பிரசிடெண்சி கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த பிறகு டெய்லி எக்ஸ்பிரஸ் என்ற ஆங்கில தினப் பத்திரிகையில் பணிபுரியத் துவங்கினார் , ஸ்வராஜ்யா , பிரிபிரஸ் ,ஸன் ,'டான்' ஆகிய பத்திரிகையிலும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சீனிவாசன் அவர்கள் ஃபிரி பிரஸ் ஜர்னலில் எழுதி வந்த காங்கிரஸ் கட்சியின் பிரச்சார செய்திகள் , அன்றைய பிரிட்டிஷ் ஆட்சிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும்,மக்களிடையே அரசைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை உருவாக்குதாகவும் குற்றம் சாட்டப்பட்டு நாசிக் சிறையில் அடைக்கப்பட்டார். சாக்ரடீஸ் தனது சிறைவாசத்தை மனமுவந்து ஏற்றுக்கொண்டாரோ அதே போல் சீனிவாசனும் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை மனம் தளராமல் ஏற்றுக் கொண்டார் , சிறையிலிருந்த படியே புத்தகங்கள் வாசித்தார் , பிளேட்டாவின் வசனங்களைத் தமிழாக்கினார், மேலும் சிலபுத்தகங்களும் எழுதினார்.
சீனிவாசனின் மீசை ஸ்டாலின் மீசையைப் போல் இருந்ததால் அவரை ஸ்டாலின் சீனிவாசன் என்றும் அழைத்தார்கள்.



மணிக்கொடி சிற்றிதழின் தோற்றம்

நாசிக் சிறைவாசம் முடிந்த அடுத்தமாதமே கு.சீனிவாசன் சென்னைக்கு வந்தார்.சுயராஜ்ய பத்திரிகையில் பணியாற்றிய வ.ராமசாமியையும் அவர் மூலம் வரதராஜுலு நடத்தி வநத தமிழ் நாடு பத்திரிகையில் பணிபுரிந்த டி.எஸ்.சொக்கலிங்கத்தையும் அணுகி " மூவரும் இணைந்து ஒரு சஞ்சிகை ஆரம்பிக்கலாம்" என்று தெரிவித்திருக்கிறார் . இதற்கு வ.ராவும் , சொக்கலிங்கமும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்
கு.ஸ்ரீனிவாசன் , வ.ராமசாமி , டி.எஸ் சொக்கலிங்கம் இவர்கள் மூவரும் தீர்மானித்தபடியே , லண்டனில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த சண்டேஅப்சர்வர் என்ற வாரப் பத்திரிகையை ஆதர்சமாகக் கொண்டு மணிக்கொடி சிற்றிதழை செப்டம்பர் 17 , 1933 இல் தொடங்கினார்கள்.



மணிக்கொடி பெயர்க்காரணம்

மணிக்கொடி என்ற பெயர் எப்படி சூட்டப்பட்டது என்பதை கு.சீனிவாசன் இவ்வாறாக விளக்குகிறார்...

ஒரு நாள் ஏதோ நினைவாக கம்பனைப் புரட்டிய பொழுது அவன் மிதிலையில்மணிக்கொடிகளைக் கண்டதாகச் சொன்னது என் மனத்தை நெருடிக் கொண்டே இருந்தது .அன்று மாலை கோட்டைக்கு அடுத்த கடல் மணலில் நாங்கள் மூவரும்பத்திரிக்கையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். கோட்டை கொடிமரத்தில்பறந்து கொண்டிருந்த யூனியன் ஜாக் திடீரென்று கீழே விழுந்தது . அதைக் கண்டஎங்களுக்கு உணர்ச்சி பொங்கிற்று , " விழுந்தது ஆங்கிலக் கொடி , இனி அங்குபறக்க வேண்டியது நமது மணிக்கொடி" என்றேன் . ஜெயிலில் மாதந்தோறும் கொடிவணக்கம் செய்வோம்.அதனால் தான் கொடிக்கு அத்தனை மகத்துவம் . அதுவே எங்கள் பத்திரிகைக்குப் பெயராகட்டும் , என்று குதூகலத்துடம் முடிவு செய்தோம்.

மணிக்கொடியின் முதல் கட்டம்

கு.ஸ்ரீனிவாசன் , வ.ராமசாமி , டி.எஸ் சொக்கலிங்கம் ஆகிய மூவரும் இணைந்துபணியாற்றிய காலகட்டத்தை மணிக்கொடியின் முதல் கட்டம் எனக் குறிப்பிடலாம்.
" பாரதி பாடியது மணிக்கொடி . காந்தி ஏந்தியது மணிக்கொடிகாங்கிரஸ் உயர்த்தியது மணிக்கொடி . சுதந்திரப் போராட்டத்தில் பல்லாயிரம்வீரர்களை ஈடுபடச் செய்து அவர்களுக்கு உற்சாகம் ஊட்டியது மணிக்கொடி.மணிக்கொடி பாரத மக்களின் மனத்திலே ஓங்கி வளரும் அரசியல் லட்சியத்தின்நுனி .....

பொதுவாழ்விற்குக் கண்ணும் காதும் பத்திரிகை . இந்நாட்டில் இன்று தோன்றிப்பயன் தரும் ஒவ்வொரு பொது இயக்கத்திற்கும் பத்திரிகைகள் ஆதாரம் , இத்துறையில்சேவை செய்து வருவன நமது மூத்த பத்திரிகைகள் எனலாம் . அந்தக் கூட்டத்தில் மணிக்கொடியும் இன்று சேருகிறது . ஒரு சிறிது பாரத்தை இதுவும் தூக்கட்டும் . தலைமக்களின் தூய்மையையும் , நேர்மையையும் வீரத்தையும் பொதுமக்களிடம் பரப்புவதே மணிக்கொடியின் பொறுப்பு . அந்தப் பொறுப்பை மணிக்கொடி ஏற்கும் "

என்ற தலையங்கத்துடன் முதல் மணிக்கொடி வார இதழ் (17/09/1933) வெளியானது.

மணிக்கொடிதோன்றிய சிறிது காலத்திற்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் பொருட்டு கு.ஸ்ரீனிவாசன் , பம்பாய்க்குச் சென்று ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதி அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை மணிக்கொடிக்கும் , தனது குடும்பத்திற்கும் அனுப்பி வந்தார்.இது பற்றி சீனிவாசன் இவ்வாறு கூறினார் .

தொடங்கின ஆறுமாதத்திற்குள் மணிக்கொடிக்கு குருத்து உலர்ந்து விட்டது ,அதற்கு உயிர்த்தண்ணீர் தேடி வளர்க்க நான் பம்பாய்க்குப் போய் ஆங்கிலப்பத்திரிகை ஒன்றில் தொழில் மேற்கொள்ள வேண்டியதாயிற்று.

இதற்கிடையில் சொக்கலிங்கத்திற்கும் , வ.ராவிற்கும் கருத்து மோதல் ஏற்பட்டது .மணிக்கொடியிலிருந்து விலகிய வ.ரா கொழும்பிலிருந்து வெளிவந்த வீரகேசரி இதழுக்குப் பணியாற்றச் சென்றுவிட்டார் . செப்டம்பர் 1934 இல் சொக்கலிங்கம் மணிக்கொடியிலிருந்து விலகி தினமணிப் பத்திரிகைக்கு ஆசிரியராகச் சென்றுவிட்டார் .

ஜனவரி 1935 இல் ,ஸ்ரீனிவாசனின் தந்தை சென்னையில் காலமானார். அதைத்தொடர்ந்து சென்னை வந்த ஸ்ரீனிவாசன் மணிக்கொடியை மேற்கொண்டு நடத்த சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்தார்.மணிக்கொடியின் முதல் கட்டம் 1933 செப்டம்பரில் தொடங்கி , 1935 ஜனவரியில் முடிவுபெற்றது.
மணிக்கொடியின் முதல் கட்டம் பற்றி ஸ்ரீனிவாசன் கூறியது ...
" நான் ஒரு லட்சியக் கூடாரம் அடித்தேன் . ஒரு காற்று வீசியது , அதில்முளைகள் பிய்த்துக் கொண்டு வந்துவிட்டன . டேராத் துணியே காற்றோடுபோய்விட்டது "

மணிக்கொடியின் இரண்டாவது கட்டம்


சிறிது கால இடைவெளிக்குப் பின் , (1935 மார்ச்) பி.எஸ் ராமையா மணிக்கொடியை நடத்த முன்வந்தார் . அவருக்கு மாதம் 25 ரூபாய் சம்பளம்தரப்பட்டது.பி.எஸ் .ராமையா காலத்தில் , கி.ராமச்சந்திரன் மணிக்கொடியில் இணைந்தார் .வாரப்பத்திரிகையாக இயங்கி வந்த மணிக்கொடி இருவார இதழாக மாறியது.ராமையாவின் காலத்து மணிக்கொடி சிறுகதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.மேலும் நவயுகப்பிரசுரம் என்ற நிறுவனத்தை ஸ்தாபித்து அதன் மூலம் புத்தகம்வெளியிடத் துவங்கினார்கள்.

மாகாண சுயாட்சி (ஏ.என்.சிவராமன்) , தேய்ந்த கனவு (கி.ராமசந்திரன்) , இரட்டை மனிதன் (கு.பா.ரா) , கப்சிப்தர்பார் (புதுமைப்பித்தனும் ,ந.ராமநத்னமும் இணைந்து எழுதிய ஹிட்லர் வரலாறு ) , பாஸிஸ்ட ஜடாமுனி (புதுமைப்பித்தன் , முசோலினி வரலாறு)ஆகிய புத்தகங்களை நவயுகப் பிரசுராலயம் வெளியிட்டது.
1938 ஆம் ஆண்டு ஜனவரி 27 இல் ஏற்பட்ட கருத்து பேதம் காரணமாக பி.எஸ் .ராமையா மணிக்கொடியை விட்டு விலகி சினிமாத் துறைக்குள் நுழைந்துவிட்டார்.

மணிக்கொடியின் வாமனானாக வந்த ராமையா திருவிக்ரமனாக வளர்ந்துவிட்டார்மாயையினால் அல்ல சேவையினால் - கு.சீனிவாசன்

மணிக்கொடியின் மூன்றாவது கட்டம்

1938 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மணிக்கொடி சிற்றிதழ் ப.இராமஸ்வாமியின் வசம் வந்தது.நவயுகப்பிரசுராலயம் மணிக்கொடி இதழைப் பற்றிய அக்கறையை விட புத்தகம் வெளியிடுவதிலேயே அக்கறையைச் செலுத்தியது .
நவயுகப் பிரசுரலாயம் நாட்டுக் கோட்டைச் செட்டியார்களிடம் விற்கப்பட்டது.அதன் பிறகு நான்கைந்து இதழுக்குப் பிறகு மணிக்கொடி இதழ் முற்றிலுமாக நின்றுவிட்டது.


மணிக்கொடி வரலாறு குறித்து புதுமைப்பித்தன்



மணிக்கொடி பொருளாதார நிர்பந்தம் என்ற நண்பரால் சிசுஹத்தி செய்யப்பட்டு அசிரத்தை என்ற குப்பைத் தொட்டியில் எறியப்பட்டு மூச்சுப் பேச்சற்றுக் கிடந்தஅந்தக் குழந்தையை எடுத்து வந்து ஆசை என்ற ஒரே அமுதூட்டி வளர்ப்பதற்காகநானும் பி.எஸ் ராமையா என்ற நண்பரும் எங்களைப் போலவே உற்சாகத்தை மட்டும்மூலதனமாகக் கொண்ட இன்னும் சக எழுத்தாளர்களும் சேர்ந்து நடத்தி வந்தோம் .அது இரண்டு மூன்று வருஷம் கன்னிப்பருவம் எய்திக் கண்ணை மயக்கும் லாவண்யத்தைப் பெறும் சமயத்தில் அதைக் கைப்பிடித்து இழுத்துக் கொண்டு ஓடும் நண்பரைப் (ப.ராமசாமி) பெற்றோம் , அவர் அவளை ஒருவருக்கு விற்றார் .விற்ற உடனே அவளுக்கு ஜீவன் முக்தி இந்தக் கலிகாலத்தில் கிடைத்தது , இதுதான் மணிக்கொடியின் கதை - புதுமைப்பித்தன்

0

ந.சிதம்பரசுப்ரமணியன் , சிட்டி (பெ.கோ.சுந்தர்ராஜன்), புதுமைப்பித்தன் , கு.ப.ரா, தி.ஜானகிராமன்,க.நா.சு , சிலம்பொலி செல்லப்பா , லா.சா.ரா, மெளனி , ஆர்.ஷண்முகசுந்தரம் , எம்.வி.வெங்கட்ராம் ஆகியோரை மணிக்கொடியின் முக்கிய எழுத்தாளர்களாகக் கருதலாம் . மணிக்கொடிக்குப் பிறகு பல சிற்றிதழ்கள் தோன்றின .

க.நா.சு , ஏப்ரல் 1939 இல் சூறாவளி என்ற இதழை கி.ராஜேந்திரனைத் துணை ஆசிரியராகக் கொண்டு
துவங்கினார். இந்த இதழில் எஸ்.ராமையா ,சிதம்பரசுரமணியன், கு.பா.ரா , புதுமைப்பித்தன் ஆகியோர் எழுதி வந்தனர். மொத்தம் 20 இதழ்களை வெளியிட்டபிறகு சூறாவளி இதழ் நின்றுவிட்டது.

வீ.ர.ராஜகோபாலன் (சாலிவாஹணன் ) , ஜூன் 1942 இல் கலாமோகினி என்றமாதமிருமுறை சஞ்சிகையைத் திருச்சியில் துவங்கினார்.சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இதழும் நின்று விட்டது.

திருலோகசீதாராம் , 05/08/1943 இல் கிராம ஊழியன் என்ற இதழை கு.பா.ராஜகோபாலனைக் கெளரவ ஆசிரியராகக் கொண்டு துவங்கினார்.கு.பா.ரா. , ஜானகி ராமனை கிராம ஊழியனில் எழுதவைத்தார் , 1944 ஆம் ஆண்டின் இறுதியில் கு.பா.ரா உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.அதற்குப் பிறகு வல்லிக்கண்ணன் கிராமஊழியனில் பணியாற்ற வந்தார்.
1944 ஆம் ஆண்டின் இறுதியில் திருலோகசீதாராம் சிவாஜி என்ற புது இதழைத் தொடங்கியவுடன் ,வல்லிக்கண்ணன் கிராம ஊழியனின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

1950 இல் கணேசன் என்பவர் பி.எஸ்.ராமையாவை அணுகி நின்றிவிட்ட மணிக்கொடி இதழைத் தொடர்ந்து நடத்துவதற்குத் தான் பணஉதவி அளிப்பதாகக் கூறியவுடன் மீண்டும் மணிக்கொடி சிறிது காலம் நீடித்தது , கணேசனுக்குப் பண நெருக்கடி ஏற்பட்டதும் இதழ் வெளியீடு நின்று விட்டது.

0

1935 ஆம் ஆண்டில் , வ.ரா அவர்கள் காரைக்குடி இலக்கிய கூட்டமொன்றில் , ' பாரதி ஒருமகாகவி , அவர் ஷேக்ஸ்பியர் ,ஷெல்லி , தாகூர் ஆகியோரைக் காட்டிலும்பாரதி கவிதைத் திறனில் உயர்ந்தவர் என்று கூறினார்.
வ.ராவின் கூற்றை ஆட்சேபிக்கும் வகையில் , நெல்லை நேசன் ஆனந்தவிகடனில் ஒரு கட்டுரை எழுதினார் . அதைத் தொடர்ந்து கல்கி ஆனந்தவிகடனில், "ஷேக்ஸ்பியர் , ஷெல்லி , தாகூர் ஆகியோரைக் காட்டிலும் பாரதி உயர்ந்தவர்,பாரதியின் கவிதையின் ஒரு வரிக்கு அவர்களது கவிதைகள் ஈடாகாது என்று எவரேனும் பேசியிருந்தால் , அவரை ஒரு நிரட்சரகுட்சி (எழுத்து வாசனை இல்லாதவர்) என்று தாம் சந்தேகிப்பதாக எழுதினார்.

இதைத் தொடர்ந்து வ.ரா இவ்வாறாக எழுதினார்..

பாரதி இலக்கணக் கவி அல்ல என்று பண்டிதர்கள் காய்ந்தார்கள் இலக்கணக் கவி என்றால் என்ன பொருள் என்று அவர்களைத் தான் கேட்க வேண்டும் . இலக்கணக் கவி அல்ல என்ற நிலையிலிருந்து பாரதியார் விடுதலையடைந்துவிட்டார்.இப்போது தேசக்கவி என்ற அரியாசணத்தை ரா.கி (கல்கி) அவருக்கு அளித்திருக்கிறார். வாணியின் வரத்தால் ரா.கியும் நெல்லை நேசனும் மகாகவி என்று பாரதியாருக்கு தங்கள் இதயமலர் ஆசனத்தை உவந்து கொடுக்கும் காலம் வராதா ? அதை கற்பனை செய்யும் படியாக அன்பர் ரா.கியை பெரிதும் வேண்டிக் கொள்கிறேன் .


வ.ராவின் கட்டுரைக்கு எதிர்வினையாக கல்கி எழுதியது.....

பாரதிக்கு எனது இதயமலர் ஆசனத்தை உவந்து கொடுக்கும் காலம் வராதா என்று பிரார்த்தனை செய்திருக்கிறீர்கள். என் இதயத்தில் பாரதிக்கு எத்தகைய இடம் உண்டென்று தங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் .முதன் முதலில் என்னுடைய பத்தாவது வயதில் பாரதியின் பாடல்களை நான்படித்தேன் . அன்று முதல் இன்றுவரை என் வாழ்நாளில் ஒரு நாளாவது பாரதியின் சில வரிகளையாவது பாடாமலோ , பாடக் கேட்காமலோ கழிந்திருக்குமென்று எனக்குத் தோன்றவில்லை. ஷேக்ஸ்பியர் , தாகூர் முதலியவர்களிடம் எனக்கு பக்தி உண்டு.நான் பிறந்து வளர்ந்த ஜில்லாவில் ஓடும் காவேரி நதியிடம் எனக்கிருக்கும் பிரியம் அளவில் அடங்காதது . ஆனால் அந்தப் பிரியம் என்னுடைய திருஷ்டியை மறைத்து விடுவதில்லை . காவேரி கங்கையை விடப் பெரியது என்று ஒருநாளும் சொல்லமுற்பட்டதில்லை .


0

கல்கி ஆரம்பத்தில் மணிக்கொடி எழுத்தாளர்களுடன் சுமூகமாகவே பழகி வந்தார்.பாரதியை மகாகவி என்று தம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது என்று கல்கி கூறிய பிறகு , மணிக்கொடி எழுத்தாளர்கள் கல்கியையும் அவர் எழுத்தையும் புறக்கணிக்கத் தொடங்கிவிட்டார்கள் . பிற்காலத்தில் புதுமைப்பித்தன் கல்கியை தனது விமர்சனக் கட்டுரைகளால் பயங்கரமாத் தாக்கினார் . கல்கி எழுதிய தழுவல் கதைகளைகளவாணி இலக்கியம் என்று குற்றம் சாட்டினார் .ஒரு கட்டத்தில் கல்கியின் குருவான ராஜாஜியே பாரதியை மகாகவி என்று கூறிவிட்ட பிறகு கல்கியால் மேற்கொண்டு பாரதியை விமர்சிக்க முடியவில்லை.

0

தமிழில் இல்லாதன இல்லை இளங்குமரா என்ற கிழட்டுத் தத்துவம் ஒழிய வேண்டும் .இப்பொழுது இலக்கியத்தின் பெயரில் நடக்கும் ஆராய்ச்சிகள் , முதல் குரங்கு தமிழனாய்த்தான் மாறியதா என்பது முதல் கம்பன் சைவனா , வைஷ்ணவனா ? தமிழ் எழுத்துக்கள் ஓம் என்ற முட்டையை உடைத்துக்கொண்டு வெளிவந்துள்ள வரலாறுவரையுள்ள இலக்கியத்திற்குப் புறம்பான தொண்டுகளையெல்லாம் அப்படியே கட்டி வைத்துவிட்டு இலக்கியத்தை அனுபவிக்கும் முறையை உணர்த்த முன்வரவேண்டும். ( புதுமைப்பித்தன் -மணிக்கொடி 01/07/34)

0

குறிப்பு நூல்கள்

1) முனைவன் சிற்றிதழ் மூலம் வெளியான மணிக்கொடி பவளவிழா மலர்
2) புதுமைப்பித்தன் கதைகள் - சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும் - தொ.மு.சி ரகுநாதன்
3) எழுத்து சிற்றிதழ்கள் 4) சுபமங்களா சிற்றிதழ்கள்
5) மணிக்கொடி சீனிவாசன் எழுத்துக்கள்
6) தமிழில் சிறுபத்திரிகைகள் - வல்லிக்கண்ணன்

0





பத்திரிகைத் தொழில் தொடங்குவது விலை உயர்ந்த தற்கொலை என்று சொல்வார்கள்.இந்தக் கூற்று வணிக இதழ்களுக்குப் பொருந்துமோ பொருந்தாதோ ஆனால் சிறுபத்திரிகைக்குச் சாலப் பொருந்தும்.

0

என்றும் அன்பகலா
மரவண்டு

8 comments:

Anonymous said...

மரவண்டு , வலைப்பது ஆரம்பிச்சாச்ச நல்லது.
செய்திகளுக்கு நன்றி

கருத்துச் சொன்னவரு: karthikramas

Anonymous said...

நல்ல வரலாற்றுக் கட்டுரை. மணிக்கொடி முக்கிய சிறுகதை எழுத்தாளர்களில் மௌனியை மறந்துவிட்டீர்கள்.

நீங்கள் படிக்கவேண்டிய மற்றொரு முக்கியமான புத்தகம் பி.எஸ்.ராமையா எழுதிய "மணிக்கொடி காலம்" என்பது.

கருத்துச் சொன்னவரு:

Anonymous said...

³Â¡ Åñ¼¡§Ã
¦ºýÈ À¾¢Å¢ü¸¡É º¢Èó¾ À¢Ã¡Âò¾õ þó¾ì ¸ðΨÃ.
¿ýÈ¢
«ýÒ¼ý
¿¼Ã¡ƒý.

கருத்துச் சொன்னவரு: Srinivaasan Natarajan

Anonymous said...

அன்புள்ள மரவண்டு

அருமையான தொகுப்பு. தொகுத்தளித்தமைக்கு நன்றி.

அன்புடன்
ச.திருமலை'



கருத்துச் சொன்னவரு: S.Thirumalai

Anonymous said...

Did you forgot to mention about Chellappa's contributions to Manikodi?

S.Thirumalai

Anonymous said...

அன்பின் மரவண்டு,

இதுவரை வந்த பதிவுகளில் இதுதான் சிறந்த பதிவென்றால் அது உண்மை! தொடரட்டும் தங்கள் இலக்கிய சேவை.

கருத்துச் சொன்னவரு: மூர்த்தி

Anonymous said...

Dear Ganesh,

Good post. continue with these kind of posts.

Suresh Kannan

கருத்துச் சொன்னவரு: Suresh Kannan

Anonymous said...

மரவண்டு,
மிக அருமையான கட்டுரை. ஆவணத்தன்மை மிகுதியாக உள்ள இக்கட்டுரை பல தகவல்களை உள்ளடக்கியுள்ளது. தொடருங்கள்.

கருத்துச் சொன்னவரு: முத்து